வியாழன், 1 ஜூலை, 2010

தமிழ்நாடு மாநில வேளான்மை மன்றச் சட்டம் வேளான்மைக்கு வேட்டு வைக்குமா ? உழவர்களின் அனுபவ அறிவை பயன்படுத்துமா ?

தமிழ்நாடு மாநில வேளான்மை மன்றச் சட்டம் 2009, என்ற சட்டம் ஒன்றை 23 ஜீன் 2009 அன்று தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த சட்டம் செயலுக்கு வரும்போது , தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படும் .

 இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மாநில வேளாண்மை மன்றத்தில் வேளாண்மை பட்டம் பெற்ற நிபுணர்கள் அதவது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேளாண்மை, வனவியல், தோட்டக்கலை, மனையியல், உயிர்தொழில் நுட்பம், வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை தகவல் தொழில் நுட்பம், உயிர் தகவலியல், சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்தும் பொறியியல், வேளாண் வர்த்தக மேலாண்மை ஆகிய துறைகளில் ,பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இந்த மன்றத்தில பதிவு செய்யமுடியும்.

வெளி மாநிலங்களிலோ, வெளி நாடுகளிலோ இத்தகைய பட்டம் பெற்றவர்கள் உரிய ஆய்வுக்கு குப்பின்னர் இந்த மன்றத்தில் உறுப்பினராக அனுமதிக்கப்படுவார்கள்,மற்ற வேளாண் தொழில்கள் செய்யும் வேறு யாறும் இந்த மன்றத்தில் உறுப்பினராக பதிவு செய்ய முடியாது .

பதிவு செய்தவர்கள் மட்டுமே இனி வேளாண்மை சார்ந்த தொழிலில் நிபுணர்களாக பணிஆற்ற முடியும். இந்த மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள், சட்ட முன்வடிவின் 29வது அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் படி பதிவேட்டில் இடம் பெற்றுள்ள நபர் ஒருவர் நீங்கலாக வேறு நபர் எவரும் தமிழ்நாடு மாநிலத்திற்குள்ளாக வேளாண்மை ஆலோசகராக தொழில் செய்வதோ அல்லது பின்வரும் வேளாண்மைப்பணிகளை ஆற்றுவதோ கூடாது .

வேளாண்மைப் பணி என்றால் அ) பயிர் வளர்ப்பு, அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழில்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, உரம், செடி வளர்ச்சியை முறைப்படுத்துதல், களைக்கொல்லிகள், பயிர்களைக் காக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையிலான பரிந்துரைக்குறிப்பு வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்பம், வேளாண்மை உயிரியியல் தொழில்நுட்ம் ஆகியவற்றில் வேளாண்மைப் பணிகளைச் செய்தல் ஆ) தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான வேளாண்மைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் வேளாண்மைத் திட்டங்களில் கையொப்பமிடுவது, அல்லது அதிகாரச் சான்றளித்தல் மற்றும் உரிய முறையில் தகுதி பெற்ற வேளாண்மை தொழிலாற்றுநர் ஒருவரால் சட்டத்தின்படி கையொப்பமிடப்பட வேண்டியதான அல்லது அதிகாரச் சான்றளிக்கப்பட வேண்டிய மதிப்பீட்டுச் சான்றிதழை வழங்குதல் . இ) மண் மற்றும் நீரின் பண்புகளையும், இயற்கை மற்றும் இரசாயன உரங்ளின் அளவைக் கணிப்பதிலும், பயிர்களுக்கு அழிவு செய்யும் பூச்சிகளையும், நோய்களையும் இனங்கண்டு நடவடிக்கைகளை வகுத்துரைமப்பதிலும், பல்வேறு மண் தரநிலைகளுக்கும் வேளாண் தட்பவேப்ப கூறுகளுக்கு ஏற்ற வகையில் பயிரிடுதல் தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதல், அவற்றை முறைபடுத்தி உதவி செய்தல், சிறு தோட்டம் அமைத்தல், மலர்செடி வளர்த்தல் மற்றும் நெடுநாள் இருக்கிற தோப்புகளை மேம்பாடுதுதல் ஆகியவற்றில் உரிய தொழில்நுட்ப பண்ணை முறைகளை மேற்கொள்வதிலும் குடியானவர்களுக்கு உதவுவகற்கும், வேளாண்மைப்பணிமனை மற்றும் ஆய்வுக்கூடங்கள் நடத்துதல் போன்றவை .

இந்த மன்றத்தில் பதிவு செய்யாத எவரும் தமிழ்றநாட்டிற்குள் மேற்கூறப்பட்ட வேளாண் பணிகளில் ஈடுபட முடியாது. மீறி ஈடுபட்டால் அது தண்டனைக்குரிய குற்றம் (அதிகபட்சமாக ஆறு மாத சிறை தண்டனை, ரூபாய் 10000 அபராதம்)

இந்த வேளாண்மை மன்றத்தில் காலம் காலமாக விவசாயம் செய்து வரும் அனுபவம் மிகுந்த விவசாயிகளுக்கு இடமில்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம செய்துவரும் தமிழக விவசாயபெறுங்குடி மக்கள் அனுபவததில் கன்டறிந்து இலாப நோக்கற்று பகிர்ந்து கொண்ட தமிழர்களின் வேளாண் அறிவை புறக்கணிக்கும் விதமாக இச்சடடம் அமைந்துள்ளது .

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்துஎருவும்
வேண்டாது சாலப் படும்                 (குறள் 1037)        அதாவது நிலத்தை உழுபவன், ஒருபலம் புழுதி கால் பலமாக காயவிட்டு பயிரிட்டால் , நிலத்திற்குப் பிடி எருவும் இடாமல் நன்கு விளையும். இதை வள்ளுவர் 104 வது உழவு என்ற அதிகாரத்தில் கூறியுள்ளார் .வள்ளுவர் எந்த வேளாண் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

 இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயிகளின் வேளாண் அறிவு குறிப்பிட்ட கல்வி நிலையங்களில் உருவாவது இல்லை . அந்த அறிவு பல்லாயிரக்கணகான ஆண்டுகளாக, பாலவகை சூழ்நிலைகளில் , பல்வேறு விளைநிலங்களில், பல்வேறு உத்திகளை கையாண்டு பெற்ற அறிவாகும் . இது தலைமுறை தலைமுறையாக தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது .

சம்பா, சீரகச்சம்பா, அறுபாதங் குறுவை, மடுமுழுங்கி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, வாடன் சம்பா , குடவாழை, குறுவைக் களையான், குழியடுச்சான், கொட்டாரஞ்சம்பா, இலுப்பைப்பூ சம்பா இவற்றையெல்லாம் தமிழர்கள் எப்போது கண்டுபிடித்தார்கள் என்ற கண்டறியப்படாதது.இவைகள் அனைத்தும் மறைந்து போகும் நிலை உருவான போது அவற்றையெல்லாம் மீட்டெடுத்தது சி.ஐ. கேஸ், டீ.இ,டி,இ மற்றும் வெஞ்ச்சர் அறக்கட்டளை போன்ற தன்னார்வ அமைப்புகளையே சாறும்

2007 ல் ஒரிசா மாநிலம் கோரக்பூர் மாவட்டம் தத்ராபுட் கிராமத்தைச் சேர்ந்த 67 வயதான எழுதப் படிக்கத் தெரியாத பழங்குடி பெண்மணி கமலா பூஜாரி இவர் வழக்கழிந்து மறைந்த நிலையில் உள்ள சில சிறந்த வகை நெல் விதைகளை மீட்டெத்து, அவற்றிர்க்கு உள்ள மருத்துவ குணங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அந்த வகை நெல் பயிர்களை மக்கள் பயிரிட வேண்டும் என்று தன் கிராமத்தில் உள்ள மக்களையும் அருகில் உள்ள கிராமத்திலும் உள்ள மக்களையும் தூண்டினார். மேலும் கிராமம் கிராமமாக சென்று கூட்டம் போட்டு விவசாயிகளுக்கு சுதேசி வகை நெல்லை உற்பத்தி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். தற்பொழுது அந்த கிராமத்தில் யாருமே நவீன இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதில்லை, இதற்காக அந்த பகுதி விவசாயிகளுக்கு உலக புகழ் பெற்ற ஈக்வெட்டார் முன் முயற்சி விருது கிடைத்துள்ளது .

இயற்கை விவசாய முறைகளில் இன்று பஞ்சகவ்யம் இந்திய முழுவதும் பரவலாக பயன்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதனை அறிமுகம் செய்தவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த டாக்டர் நடராஜன் என்பவர்.

1996 ல் ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அப்போது டெக்கான் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பி.வி. சதீஷ் என்பவர் விவசாயிகளைத் திரட்டி வறட்சியைத் தாங்கி விளையும் நவதானிய விளைச்சலை அறிமுகப்படுத்தினார். தண்ணீர், மின்சாரம் போன்ற அரசின் எந்த உதவியும் இன்றி விவசாயிகள் நவதானிய விளைச்சலை அமோகமாக செய்தனர் இதனால் மக்களுக்கு பொதுவிநியோக விலையில் தானியங்களை விற்பனை செய்தனர் .

இப்போது தமிழக அரசால் அதிகம் வலியுறுத்தப்படும் செம்மை நெல் சாகுபடி மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்டது 2000 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் போன்றவர்கள்தான் இதனை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தனர்.இவர்கள் யாவருமே வேளாண்மைப் பட்டதாரிகள் இல்லை.

 இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவோர் வேளாண்மைத் தொழிலின் மீது அதிக ஆர்வம் கொண்ட தனிமணிதர்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள்தான். தமிழக அரசின் புதிய சட்டம் மூலம் விவசாயத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் தங்கள் கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது.அவ்வாறு ஈடுபட்டால் அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். மருத்துவத் தொழிலையும், சட்டத் தொழிலையும் நெறிப்படுத்த இந்திய மருத்துவ மன்றமும், இந்திய வழக்குரைஞர் மன்றமும் இருப்பதுபோல வேளாண்மைத் தொழிலை நெறிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . மருத்துவம் படித்தவர்களில் ஏறக்குறைய அனைவருமே மருத்துவத் தொழிலையே செய்து வருகின்றனர் . சட்டம் படித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டம் மற்றும் சட்டம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர் . ஆனால் வேளாண்மை படித்தவர்களில் எத்தனைப் பேர் வேளாண் தொழில் செய்து வருகின்றனர் என்று கேள்வி எழுப்பினால் பதிலைக் காணோம் , வேளாண் பட்டதாரிகள் அனைவரும் அரசுப்பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் தான் பணியாற்ற விரும்புகின்றனர் . ஏன் அவர்கள் பெற்ற கல்வியின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லையா?

 இந்த சட்டமானது நமது நாட்டு வேளாண்மைக்கு வேட்டு வைக்காமல் இருக்க தமிழக விவசாயிகளின் அனுபவ அறிவினை பயன்படுத்தும் விதமாக திருத்தப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.